articles

img

கோலாலம்பூரில் கோலாகலம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுக்கூர் ராமலிங்கம்

     11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21 முதல் 23 வரை சிறப்பாக நடந் தேறியது. “இணையக் காலகட்டத்தில் தமிழ்மொழி” என்பது மாநாட்டின் கருப் பொருளாக அமைக்கப்பட்டிருந்தது. மலேயப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் துவக்கி வைத்ததோடு, மாநாட்டுச் செலவுகளுக் காக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2 கோடி, மலேயப் பல்கலைக்கழகத்தின் இந்திய வியல் துறைக்கு ரூ. 1 கோடி, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ரூ. 2 கோடி அறிவித்தார். மலேசியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கை எடுத்துரைத்த அவர், அந்த நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பது குறித்து  பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு இன, மத மக்கள் வாழ்ந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் மலேசியா திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.  

     57 ஆண்டுகளுக்கு முன்பு தனிநாயகம் அடிகளார் 1966இல் மலேசியாவில் முத லாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியுள்ளார். இரண்டாவது மாநாடு சென்னையில் அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது சிறப்பாக நடை பெற்றது. பாரீஸ், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகளை யும் அவர் சிறப்பாக நடத்தியது குறிப் பிடத்தக்கது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது மதுரையிலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தஞ்சையிலும் நடைபெற்றது. கலைஞர் முதல்வராக இருந்தபோது கோவையில் செம்மொழி மாநாட்டினை நடத்தினார். கடந்த முறை அமெரிக்காவின் சிகாகோவில் மாநாடு நடைபெற்றது.

   உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோலாலம்பூர் மாநாட்டுக்கு முன்பு சென்னையில் இதே பெயரில் 11வது மாநாடு நடந்துள்ளது. இத்தகைய போட்டி மாநாடுகள் தவிர்க்கப்பட்டு ஒற் றுமையுடன் ஒரே மாநாடாக நடத்துவது தமிழ் ஆராய்ச்சிக்கு ஊக்கம் தரும்.

     தற்போது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக மலேசியா வைச் சேர்ந்த டாக்டர் மாரிமுத்து இருப்ப தால் மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. மலேசிய அமைச்சர்கள் வ.சிவகுமார், சரஸ்வதி கந்தசாமி, டாக்டர் எம்.சரவணன், மாநாட்டு வரவேற்புக்குழு வின் துணைத்தலைவர் ஓம்ஸ் வ.தியாக ராஜன், இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் டாக்டர் கோ.வி.சிவபாலன், மாநாட்டின் செயலாளர் முனைவர் கிருஷ் ணன் மணியம், முரசு ஏட்டின் ஆசிரியர் நெடுமாறன் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடு களை செம்மையாக செய்திருந்தனர். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் நந்தன் மாசிலாமணி, உலக அளவிலான பேராளர்களை ஒருங் கிணைத்து சிறப்பாக வழிநடத்தினார்.

    மாநாட்டின் துவக்க நிகழ்வில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி., பேசும்போது, ஓரிருவர் வெறிக்கூச்ச லிட்டனர். தமிழகத்திலிருந்து வந்திருந்த பாஜகவினர் இதன் பின்புலத்தில் இருந்துள்ளனர். ஆனால் மாநாட்டு அரங்கு இந்தக்கூச்சலைப் புறக்கணித்து பொருட் படுத்தாத நிலையில், சில ஊடகங்களில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு இருந்தது போல தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

   மாநாட்டில் அரசியல் கலப்பு வேண்டாம் என்று கூறிக்கொண்டாலும் மலேசிய அமைச்சர்கள் உட்பட அரசியல் சார்ந்தே பேசினர். தொல் திருமாவள வனுக்கு பதிலளிக்கும் வகையில் மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வீட்டிலும் சமூகத்திலும் சாதி இல்லை. அரசியலில் தான் இருக்கிறது என்றார்.

    மாநாட்டின் துவக்கத்திலும் அவ்வப் போதும் நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று பாடினர். தமிழகத்தி லிருந்து சில சைவமட ஆதீன கர்த்தர் களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழ்மொழி ஆராய்ச்சி மாநாட்டில் பேசும்போது, பெரியார் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார் என்பதை விரிவாக எடுத் துரைத்தார். பெரியார் கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தம் எந்த அளவுக்கு பய னுள்ளது என விளக்கினார். தமிழ் இலக் கணங்களிலும் கூட புகுந்துள்ள சனா தனத்தை தோலுரித்தார்.

    ஆனால் மாநாட்டின் இன்னொரு அரங்கில் பேசிய பழ.கருப்பையா, திருக்குறளுக்கு பரிமேழகர் உரைதான் சிறந்தது என்றதோடு பெரியார் பொழுது போகாமல் எழுத்துச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டார் என்று போகிறபோக்கில் அடித்துவிட்டார். 

    மாநாட்டில் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தம்மை முத்தமிழ்க் காவலர் கிஆபெ விஸ்வநாதத்தின் பேரன் என்று கூறிக்கொண்டே மோடி அரசுக்கு சொம்படித்தார். தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையால்தான் தமிழ் வளர்ச்சி தடைபட்டது என்றும் தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயப்பாடமாக இல்லை, இதுகுறித்து கடைசி காலத்தில் கிஆபெ வருத்தப்பட்டதாகவும் கூறிக்கொண்டார்.

    பின்னர் பேசிய பேராசிரியர் சுப.வீர பாண்டியன், தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்பட்டதை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்ததோடு முகாம் மாறலாம் ஆனால் தவறான தகவல்களைக் கூறக் கூடாது என்று ஸ்ரீகாந்த்தைக் கண்டித்தார்.  

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நானும், தோழர் கே.பாலபாரதி யும் இந்த மாநாட்டில் பங்கேற்றோம். பொது அரங்கில் தோழர் கே.பாலபாரதி பேசும்போது, காலம் காலமாக இலக்கி யத்தில் பெண்களின் பங்கு குறித்து எடுத் துரைத்ததோடு பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை நயமாக எடுத்துக் கூறினார். 

   எழுத்தாளர்களுக்கான அரங்கில் “மேடை வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் பேசிய நான், சிலப்பதிகாரம் துவங்கி இப்போது வரை மேடை எவ்வாறு தமிழை வளர்த்துவந்துள்ளது என்று குறிப்பிட்டதோடு, விடுதலைப்போராட்ட காலத்திலும், திராவிட இயக்க வளர்ச்சி யிலும் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்ததிலும் மேடைத்தமிழ் எவ்வாறு உதவியது என கூறினேன்.

    பொது நிகழ்வுகள் தவிர, தனித்தனி யாக அமைக்கப்பட்டிருந்த ஆய்வரங்கு களில் ஆய்வாளர்கள் கட்டுரை வாசித்த னர். சங்க இலக்கியம் துவங்கி, நவீன இலக்கியம் வரை நூற்றுக்கணக்கான தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. சித்த மருத்துவத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டது சிறப்பு. எனினும் ஆய்வரங்குகள் இன்னமும் கூடுதல் கவனத்தோடு ஒருங்கிணைக்கப் பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுந்தது. 

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் களில் ஒருவரான சி.மகேந்திரன் திணைச் சமூகம் ஒரு குடிமைச் சமூகம் என்ற தலைப்பில் அருமையானதொரு ஆய்வு ரையை வழங்கினார். இது நூலாக விரியும்போது சங்ககால சமூகத்தின் மாண்புகளை அறிய முடியும்.  

    மாநாட்டு விளம்பரங்களில் மலேசிய பிரதமரின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. தனிநாயகம் அடிகளார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் படங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். மாநாட்டு நிறைவு நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மலேயப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பேராசிரியர் சமயக் கருத்துக்களை மறுத்து முன்வைத்துப் பேசியவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். தமிழ்நாட்டுக் குப்பைகளை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றார். தமிழில் இதுவரை உருப்படியான ஆய் விதழ்களே வரவில்லை என்று அவதூறு செய்தார். மேடையில் அமர்ந்திருந்த தோழர் கே.பாலபாரதி அவரிடம் தன்னுடைய கடும் ஆட்சேபணையைத் தெரிவித்தார். 

    மதுரை திருநகருக்கு வந்து தமிழ் கற்று திருக்குறள் உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கனடாவைச் சேர்ந்த தாமஸ் கிட்டோஜி, சீனாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தமிழ் இருக்கையில் பணி யாற்றும் நிலானி ஆகியோரது உரை களும், கீழடி அகழ்வாய்வு நாயகன் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் உரையும் மாநாட்டின் கவனத்தை ஈர்த்தன.  

    பல்வேறு வகைகளில் சிறப்புமிக்க தாக அமைந்தது 11வது மாநாடு. இத்தகைய தமிழாராய்ச்சி மாநாடுகள் தமிழை அறிவியல்பூர்வமானதாக மாற்ற மேலும் ஆக்கமும் ஊக்கமும் தரும் என்பது உறுதி. தமிழை தெய்வத்தமிழாக மட்டுமே நிறுவ சிலர் முயலும் போது மக்களின் வாழ்வில் மொழியாக இருப்ப தன் காரணமாகவே அது இன்னமும் சீரிளமை திறத்தோடு திகழ்கிறது என்பதை உணர்ந்து மக்கள் மொழியாக தமிழ் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.